குஜராத் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி மற்றும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்..

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி, குஜராத் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்பின் ஆடிய குஜராத் அணி, சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, சென்னை அணியின் பேட்டிங்கில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சிஎஸ்கே அணிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சென்னைக்கு பட்டத்தை பெற்றுத் தந்தார்.

இந்த வெற்றிக்கு சென்னை அணியின் ஒவ்வொரு வீரரும் பங்களித்துள்ளனர். ருது ராஜ், கான்வே, மிடில் ஓவர்களில் அதிரடி காட்டிய ரஹானே, மோகித் சர்மாவின் ஓவரில் ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பிய ராயுடு, ரஷித் கானின் ஓவரில் சிக்ஸர் அடித்த துபே உட்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் சிஎஸ்கே வெற்றிக்கு பங்களித்துள்ளனர். இதனால், இந்த வெற்றியை தனி நபரின் வெற்றியாக இல்லாமல் சென்னை அணியின் வெற்றியாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 5வது முறை கோப்பை வென்ற சென்னை அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ட்விட் செய்துள்ளார். அதில், எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கேக்கு வாழ்த்துக்கள். குறைந்த பட்சம் சில விளையாட்டு வீரர்களுக்காவது உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களைப் பொறுத்தவரை, நீதிக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார். நீதி கேட்டு மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருவதை சுட்டிக்காட்டி அவர் ட்விட் செய்துள்ளார்.