உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி நகரின் கோத்வாலி பகுதியில் உள்ள குறுகிய குடியிருப்புச் சாலைகளில், ஒரு கும்பல் அதிவேகமாகவும் அநாகரீகமாகவும் பைக் ஓட்டி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மாலை நேரங்களில் பயிற்சி வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் மாணவிகளைக் குறிவைத்து, இந்த கும்பல் பைக்குகளில் பின் தொடர்ந்து செல்வதும், உரசுவது போல நெருங்கிச் சென்று ஆபாசமாகப் பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
<a href=”http://

“>
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் கண்டனத்தைப் பெற்ற நிலையில், இத்தகைய சமூக விரோதச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக  காவல்துறையினர் எக்ஸ் (X) தளத்தில் விளக்கம் அளித்துள்ளனர். அதில், “வைரல் வீடியோவில் உள்ள காட்சிகள் தொடர்பாக காவல் நிலைய அதிகாரிக்கு உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி, மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்தமர்ம நபர்களை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.