ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வருகிற 25-ம் தேதி மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வீரப்பன்சத்திரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே கடும் மோதல் வெடித்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 7 பேரின் மண்டை உடைந்தது. அதன் பிறகு இந்த மோதலில் சில போலீசாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பெரிய அளவில் வெடிக்க இருந்த கலவரத்தை போலீசார் சாதூரியமான முறையில் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினருக்கு தற்போது பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் போலீசாரை சீமான் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேபோன்று பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் நாம் தமிழர் கட்சியினரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.