கடந்த திங்கட்கிழமை அன்று குருகிராமில் பெய்த கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பித்தது. குறிப்பாக, சுபாஷ் சௌக் பகுதியில் பள்ளிப் பேருந்துகள் வெள்ளநீரில் சிக்கிக்கொள்ள, உள்ளே இருந்த குழந்தைகள் பல மணி நேரம் தவித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பெருநிறுவனங்கள் மற்றும் சொகுசு வீடுகளின் மையமாக அறியப்படும் குருகிராமின் தரம், இந்த மழையால் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 75 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மதியம் 1 மணி முதல் 3 மணி வரை பெய்த அதீத மழையால் நகரின் பல பகுதிகள் உடனடியாக வெள்ளக்காடாயின. மிகவும் மோசமான காட்சிகளாக, சுபாஷ் சௌக் பகுதியில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பள்ளிப் பேருந்துகள் ஆழமான நீரில் சிக்கிக்கொண்டன. டிரைவர்களும் உதவியாளர்களும் பேருந்தின் கூரை மீது ஏறும் அளவுக்கு நிலைமை மோசமானது.

 

பள்ளிப் பேருந்துகள் நடுவழியில் ஸ்தம்பித்ததால், குழந்தைகள் பல மணி நேரம் பேருந்துக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கவும், வெள்ளத்தில் தத்தளிக்கும் அவர்களை மீட்கவும் பெரும் போராட்டம் நடத்தினர். பள்ளியில் இருந்து மதியம் 12:30 மணிக்குக் கிளம்பிய இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது வீட்டை அடைய இரவு 8:30 மணி ஆனது. பிற குழந்தைகளும் பள்ளிப் பேருந்துகளிலேயே 3 முதல் 6 மணி நேரம் வரை சிக்கித் தவித்துள்ளனர். நகரின்  முக்கியப் பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தத் தீவிரமான உள்கட்டமைப்புச் சீர்கேடு ஆன்லைனில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. எக்ஸ் (X) தளத்தில் பயனாளர் ஒருவர், “மாதம் 50,000 முதல் 60,000 ரூபாய் வரை பள்ளிக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளையும், ஆடம்பர வீடுகளையும் இணைப்பது மூன்றாம் உலகத்துச் சாலைகள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, ஆகஸ்ட் 25 அன்று பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த குருகிராம் நிர்வாகம் அறிவுறுத்தியது. மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வடிகால் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ‘ஒர்க் பிளஸ் ஹோம்’  வழங்க அறிவுறுத்தப்பட்டன. இதற்கிடையே, தீவிர வானிலை நிலவும் காலங்களில் பள்ளிகளுக்குச் பிரத்யேகப் பருவமழை விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.