சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் சுமார் 4000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொசு உற்பத்தியை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஊழியர்கள், பாதாள சாக்கடையில் கொசுவலை வைத்து அடைத்த சம்பவம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது பாதாள சாக்கடையில் இருந்து தான் கொசுக்கள் பெரும்பாலும் வெளிவரும் என்று கூறுவார்கள்.

இதன் காரணமாக பாதாள சாக்கடை மூடியை எடுத்துவிட்டு அதன் மீது ஒரு கொசு வலையை வைத்து பின்னர் அந்த இரும்பு மூடியை வைத்து ஊழியர்கள் மூடினார்கள். கொசுவலை வைத்து விட்டால் பாதாள சாக்கடையில் இருந்து கொசு வராதாம். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பகுதி மக்கள் சிரிப்பலையில் மூழ்கியுள்ளனர். மேலும் இதற்கு முன்னதாக வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க அப்போது அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு தெர்மாகோல் விட்டது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.