அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த ஒரு பதைபதைக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்குள்ள மின்சாரம் பாயும் அபாயகரமான ரயில் தண்டவாளத்தில் ஒரு நபர் தவறி விழுந்து, மின்சாரத் தாக்குதலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த நொடியில், அங்கு நின்றிருந்த 20 வயது இளைஞர் ஒருவர், மற்றவர்கள் தயங்கி நின்றபோது துணிச்சலாகத் தண்டவாளத்தில் குதித்தார். தன் மீதும் மின்சாரம் பாயும் என்ற அச்சமின்றி, அங்கிருந்த நபரை இழுத்து வெளியே கொண்டு வந்து அவர் உயிரைக் காப்பாற்றினார். இந்தத் துணிச்சலான மீட்புப் பணி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த இளைஞரின் தன்னலமற்ற இந்த வீரச்செயலைப் பாராட்டி, அவருக்குப் புதிய கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தருணத்தைக் காட்டும் வீடியோவில், எதிர்பாராத இந்தப் பரிசைக் கண்டு அந்த இளைஞர் நெகிழ்ந்து போவதும், அங்கிருந்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதும் பார்ப்பவர் கண்களைக் குளமாக்குகிறது. “மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருக்கிறது” என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள இந்த வீடியோ, எக்ஸ் (X) தளத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.