இந்தியாவில் உள்ள ஒரு மூத்த மென்பொருள் பொறியாளர், அமெரிக்காவில் அட்லாண்டாவில் நடைபெறவிருக்கும் ‘Kubecon + CloudNative Con’ என்ற பெரிய தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொள்ள B1/B2 விசாவுக்கு விண்ணப்பித்தார். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேர்காணலுக்குச் சென்றபோது, அந்த அதிகாரி இவரிடம் வெறும் 60 வினாடிகளில் மூன்றே மூன்று கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளார். பதிலளித்த அடுத்த நொடியே, அவரது விசா நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அந்தப் பொறியாளருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

அந்த அதிகாரி கேட்ட கேள்விகள் இவைதான்: “உங்கள் பயணத்தின் நோக்கம் என்ன?”, “இதற்கு முன் வேறு எந்த நாடுகளுக்குச் சென்றுள்ளீர்கள்?”, மற்றும் “உங்களுக்கு அமெரிக்காவில் யாராவது தொடர்பு உள்ளதா?” இதற்குப் பதிலளித்த பொறியாளர், தமது நோக்கம் மாநாடுதான் என்றும், முன்பு லிதுவேனியா, மாலத்தீவுகள் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், மேலும் அமெரிக்காவில் தனக்கு உறவினர்களோ நண்பர்களோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்தக் கேள்விகளுக்குப் பிறகு, அந்த அதிகாரி விசாவுக்கு மறுப்புத் தெரிவிக்கும் பிரிவு 214(b)-ஐக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.

விசா நிராகரிக்கப்பட்ட இந்தப் பொறியாளர், கடந்த 11 வருடங்களாக ஒரே பெருநிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடி சம்பளம் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருப்பதால், மாநாடு முடிந்ததும் இந்தியாவுக்குத் திரும்பி விடுவதே தனது முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தியத் தொழில்நுட்பத் துறையில் உள்ள சக ஊழியர்கள் அளித்த ஊக்கத்தின் காரணமாக, என்ன தவறு நடந்தது என்பதைக் கண்டறிந்து, விரைவில் அவர் மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.