மும்பையின் ஆரே காலனி பகுதியில் வியாழக்கிழமை இரவு, அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதால் விலங்கு உரிமை ஆர்வலர் மற்றும் பீப்பிஎஃப்ஏ மும்பை தலைவர் விஜய் ரங்கரே காயமடைந்தார். இந்த சம்பவம், ஆரே வனப்பகுதிக்குள் உள்ள பிர்சாமுண்டா சௌக் மற்றும் போவாய் அருகே, ரங்கரே பயணம் செய்த காரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றபோது நடந்தது.
ரங்கரேவின் வாக்குமூலத்தின்படி, இரு சக்கர வாகனங்களில் வந்த சுமார் 15 முதல் 18 பேர் அவரையும் அவரது குழுவினரையும் சுற்றி வளைத்து, திடீரென தாக்குதல் நடத்தினர். தாக்குதலின்போது, அவர்கள் அவரது காரை பெரிய கற்களால் தாக்கி ஜன்னல்களை உடைத்து, வாகனத்தை சேதப்படுத்தினர்.
தாக்குதலில் ரங்கரே மற்றும் அவரது உதவியாளர் தலையில் மற்றும் கால்களில் காயமடைந்தனர். தாக்குதலை எதிர்த்து போராடிய ரங்கரே, தனது பதிலடி மூலம் 3 முதல் 4 பேரை தாக்கியதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார். சில நிமிடங்களில் தாக்கிய குழு அங்கிருந்து ஓடிப்போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், சம்பவத்திற்கான ஆதாரமாக தனது சேதமடைந்த காரின் வீடியோவுடன் விபரங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரங்கரே, “எப்படியோ நாங்கள் உயிருடன் தப்பியுள்ளோம். ஆனால் இத்தகைய தாக்குதல்களால் உண்மையை அழிக்க முடியாது” எனக் கூறினார்.
View this post on Instagram
தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள அவர், வலது காதில் கேட்கும் சிரமம் இருப்பதாகவும், மேலும் சிகிச்சை தேவைப்படலாம் என்றும் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை மதியம் ஆரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாகவும், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் தன்னுடன் வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தெருநாய்களுக்கு உணவு வழங்கும் பிரச்சனைகள் குறித்து ஓர் ஆதங்கத்துடன் தனது குரலை உயர்த்திவந்த ரங்கரேவுக்கு, சமூக ஊடகங்களில் பலர் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். தாக்குதலை கண்டித்தும், போலீசாரிடமிருந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ போலீஸ் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
