துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. மேலும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் திரும்பிய இடமெல்லாம் பிணக்குவியலும் மர்ம ஓலங்களும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளும் மட்டுமே காண முடிகின்றது. மலை போல் குவிந்து கிடக்கும் கட்டிட ஈடுபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். இந்த பணியில் இந்தியா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரஷ்ய நாட்டுடனான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்திலும் மனிதாபிமான அடிப்படையில் உக்ரைன் வீரர்கள் துருக்கிக்கு சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை உக்ரைனில் இருந்து 88 வீரர்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.