தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றது அண்டை மாநிலமான கேரளாவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் இடப்பள்ளியைச் சேர்ந்த ஹாரிஸ் மற்றும் பீமா தம்பதியினர், விஜய்யின் தீவிர ரசிகர்களாகத் தங்களது மகிழ்ச்சியை ஒரு நெகிழ்ச்சியான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர். அங்குள்ள ‘1983’ என்ற தங்களது ஹோட்டலுக்கு வரும் முதல் 150 பேருக்கு விலையில்லா சிக்கன் பிரியாணி வழங்கி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அவர்கள் கொண்டாடித் தீர்த்துள்ளனர்.

​தகவல் தொழில்நுட்பத் துறையிலும், கல்வித் துறையிலும் பணியாற்றும் இந்த தம்பதியினர், கடந்த 20 ஆண்டுகாலமாக விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். “திரையில் பார்த்த எங்கள் தலைவன் இன்று முதல்வராக அமர்ந்திருப்பதைப் பார்ப்பது கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம்” என அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 150 பேருக்கு எனத் திட்டமிடப்பட்ட இந்த அன்பு விருந்தில், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரியாணி உண்டு மகிழ்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.