மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சத்னா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து, ஆற்றின் நீரோட்டம் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆறுகள், பாலங்கள் மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் காவல் துறையினரும் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் சில இளைஞர்கள் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், சில இளைஞர்கள் வேகமாகப் பெருக்கெடுத்து ஓடும் சத்னா ஆற்றில் குதித்து, நீரோட்டத்துடன் அடித்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால், ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் சிறிய தவறும் மிகப்பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆற்றில் திடீரென உருவாகும் சுழல் அல்லது ஆழமான பகுதிகளில் ஒருவர் சிக்கிக் கொண்டால், அவரை மீட்பதும் மிகவும் சிரமமாகிவிடும் என்பதால், பொதுமக்கள் ஆபத்தான பகுதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
View this post on Instagram
இதேபோல், கோல்காவான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள மாதவ்கர் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆற்றின் அருகே உள்ள ஆபத்தான பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்களின் நடமாட்டத்தை போலீஸார் கட்டுப்படுத்தி வருகின்றனர். போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்புகளை மீறி பாழடைந்த பாலத்தில் சிறுவன் ஒருவர் சைக்கிளில் சென்றதாகக் கூறப்படும் காட்சியும் வெளியாகியுள்ளது. ஆபத்து இருப்பது தெரிந்தும் சிறுவர்கள் இவ்வாறு செயல்படுவது, மழைக்காலத்தில் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கனமழை காலங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகளின் நீரோட்டம் எந்த நேரத்திலும் திடீரென அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக ஆற்றில் குளிப்பது, நீரில் குதிப்பது, ஆபத்தான பாலங்களில் செல்வது, வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, சத்னா ஆற்றில் குதித்த இளைஞர்களை விடியோ காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் வெள்ள அபாயம் நிலவும் சூழலில், ஒரு சிறிய அலட்சியம்கூட உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதால் பொதுமக்கள் நிர்வாகத்தின் எச்சரிக்கையைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகியுள்ளது.
