தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு.

தமிழ்நாடு அரசின் சார்பில் 2019 முதல் 2022 வரை திரைப்படவிருதுகள், 2018 முதல் 2022 வரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் மற்றும் 2015 முதல் 2022 வரை சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24.11.2023 முதல் 08.01.2024 மாலை 5 மணி வரை பெறப்படும் என ஏற்கனவே நாளிதழ்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காலக்கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும் என்கிற திரையுலகத்தினரின் கோரிக்கையினை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து விண்ணப்பங்கள் பெறப்படும் நாளினை 31.01.2024 அன்று மாலை 5.00 மணி வரை நீட்டித்துள்ளது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், உறுப்பினர் -செயலாளர், திரைப்படத் துறையினர் நலவாரியம், முதல் தளம், மாநில செய்தி நிலையம், கலைவாணர் அரங்க வளாகம், சென்னை-600 002. என்ற முகவரியில் 31.01.2024 ஆம் தேதி மாலை 5.00 மணி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) பெறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.