
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களிடம் இரும்பு சத்து குறைபாடு இருப்பதால் பெரும்பாலானோர் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று மத்திய அரசு ஆய்வில் கண்டறிந்துள்ளது. அதனால் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. அதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கின்றது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தில் செயல்பாடுகளுக்கு உதவுகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் திருச்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செறிஊட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் போலவே விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செறி ஊட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த அரிசியை சிலரும் பிளாஸ்டிக் அரிசி என்று கூறி வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த அரிசியின் பயன்பாடு குறித்து நுகர் பொருள் வாணிப கழகம் சார்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.