கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தச் கொடூர சம்பவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைச் சந்திப்பதற்காகக் காவல்துறை உயர் அதிகாரிகள் வந்திருந்தனர்.

அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுப்பதற்கு முன்பாக, அங்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சியுடன், ஒருவருக்கொருவர் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

​10 வயதுக் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர நிலையை எண்ணி தமிழகமே சோகத்திலும் ஆத்திரத்திலும் உறைந்திருக்கும் இந்த வேளையில், வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் இவ்வளவு பொறுப்பில்லாமல் சிரித்து மகிழ்வது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கேமரா ஆன் ஆவதற்கு முன்னால் இவ்வளவு ஜாலியாகச் சிரித்துப் பேசிவிட்டு, பேட்டியின் போது மட்டும் சோகமாக முகத்தை வைத்துக் கொள்கிறார்களா?” என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.