சமூக ஊடகமான ‘எக்ஸ்’ (X) தளத்தில், அதிவேகமாகச் செல்லும் பேருந்து ஒன்றின் முன்னால் வாலிபர் ஒருவர் திடீரென ஓடிவந்து மோதும் பதைபதைக்க வைக்கும் விபத்து வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பரபரப்பான சாலை ஒன்றில் பைக்கிலிருந்து திடீரென இறங்கும் வாலிபர், எவ்வித எச்சரிக்கையுமின்றி சாலையைக் கடக்க ஓடுகிறார்.

பின்னால் இருக்கும் அவரது நண்பர் எவ்வளவோ சத்தமிட்டுத் தடுத்தும், அந்த வாலிபர் கேட்காமல் பேருந்தின் முன்னால் பாய்ந்து விபத்தில் சிக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் வாலிபரின் தற்போதைய நிலை என்ன அல்லது இச்சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

 

இவ்வீடியோவைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் பலரும், வாலிபரின் இந்த அலட்சியமான செயல் மிகவும் ஆபத்தானது என்று கண்டித்து வருகின்றனர். மேலும், சாலையில் அவசரப்பட்டு எடுக்கும் ஒரே ஒரு தவறான முடிவு, சில நொடிகளில் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதால், அனைவரும் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், அவசரத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் இந்த வீடியோவின் மூலம் விழிப்புணர்வு விடுத்துள்ளனர்.