
கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலம்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் (30) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஷாலினி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கலையரசன் விஷம் குடித்ததாக கூறி குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கபட்டது. இது தொடர்பாக கலையரசன் போலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில் மனைவி ஷாலினி தனக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறினார்.
அதாவது ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லாத நிலையில் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர் வேறொரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் முதலிரவின் போது தன்னுடைய கணவரிடம் இதனை தெரிவித்துள்ளார். இதனால் ஷாலினியை மறுநாள் அவருடைய பெற்றோர் வீட்டிற்கு கலையரசன் அனுப்பி வைத்த நிலையில் பின்னர் உறவினர்கள் சமரசம் செய்து மீண்டும் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப்போது தன்னுடன் வாழ பிடிக்காமல் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாக கலையரசன் கூறினார்.
ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் கலையரசன் தான் பூச்சி மருந்தை ஜூசில் கலந்து குடித்தது தெரிய வந்தது. அதாவது கடந்த மாதம் 13ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட நிலையில் ஷாலினி தன்னுடைய தாய் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். பின்னர் கலையரசன் தன் மனைவியை சமாதானப்படுத்தி கடந்த 16ஆம் தேதி தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
பின்னர் தன்னை அசிங்கப்படுத்திய ஷாலினியை பழிவாங்க கலையரசன் துடித்தார். இதனால் தனக்குத்தானே பூச்சி மருந்தை கலந்து குடித்துவிட்டு ஷாலினி மீது பழி போட போவதாக தன் நண்பர்களிடம் கூறியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் மருந்து கடைக்கு சென்று பூச்சி மருந்து வாங்கிய ரசீது மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் போன்றவைகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கலையரசன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும் மனைவியை பழிவாங்க நினைத்து கடைசியில் அவரே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.