தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் இன்று   ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக வழங்கப்படும். அதன் பிறகு ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும்.

மேலும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக குடும்ப உறுப்பினர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கைரேகை இணைக்கப்படவில்லை என்றால் யாருடைய கைரேகை இணைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே பொங்கல் பரிசு தொகை பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 12ஆம் தேதிக்குள் கொடுத்து முடிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் குறித்த ஆய்வுக்கு பின் பேசிய அவர், ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுகளை மக்கள் ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம். இந்த பரிசுத் தொகுப்பில் உள்ள கரும்புகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே அதிகாரிகள் மூலம் வாங்கப்படுகிறது. இடைத்தரகர்கள் யாரும் இல்லை என தெரிவித்துள்ளார்.