மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஜல்கான் ஜாமோத் பகுதியில், ஷிவானி என்ற இளம்பெண் திடீரென வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை பாபுராம் கலாமேக்கரும், அவரது சகோதரரும் குடும்ப அவமானத்தை தாங்க முடியாமல் ஒரு விபரீத முடிவை எடுத்தனர்.

அந்த சமயத்தில் அப்பகுதியில் தலை இல்லாத, பாதி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர். அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைத்த தந்தையும் மகனும், “நாங்கள் தான் ஷிவானியைக் கொலை செய்து உடலை எரித்தோம்” என்று போலீசாரிடம் பொய் வாக்குமூலம் அளித்தனர். போலீசாரும் எந்தவொரு மரபணு (DNA) பரிசோதனையும் செய்யாமல், அவசர அவசரமாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், 20 நாட்களுக்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக, ஷிவானி திடீரென காவல் நிலையத்திற்கு உயிரோடு நடந்து வந்து தான் நலமாக இருப்பதாகக் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், தந்தையையும் மகனையும் உடனடியாகச் சிறையிலிருந்து விடுவித்தனர்.

இதுகுறித்து பேசிய தந்தை, மகள் ஓடிப்போன ஆத்திரத்தில் தான் இப்படிப் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டார். இந்த அலட்சியமான விசாரணையால், காவல் துறை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் உட்பட 6 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்போது ஷிவானி உயிருடன் வந்துவிட்டதால், அன்று மீட்டெடுக்கப்பட்ட அந்தத் தலை இல்லாத பெண் சடலம் யாருடையது மற்றும் உண்மையான கொலையாளி யார் என்ற மர்மம் விலகாமல் போலீசார் மீண்டும் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.