மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நகரை அழகுபடுத்துவதற்காகச் சுவர்களில் வரையப்பட்டிருந்த யோகாசன ஓவியங்கள் சிதைக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் யோகா செய்வது போன்ற நிழல் உருவ ஓவியங்கள் (Silhouettes) சாலையோரச் சுவர்களில் வரையப்பட்டிருந்தன. இந்த ஓவியங்களில் பெண்களின் முகம் மற்றும் உடல் பகுதிகளை மட்டும் குறிவைத்து, மர்ம நபர்கள் ஆபாசமான முறையில் கீறிச் சேதப்படுத்தியுள்ளனர்.

இது ஏதோ தற்செயலாக நடந்த சேதம் போலத் தெரியவில்லை என்றும், பெண்களை இழிவுபடுத்தும் நோக்கோடும், வக்கிர புத்தியோடும் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல் என்றும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர்வாசி ஒருவர் முன்வந்து அந்தச் சிதைக்கப்பட்ட ஓவியங்களை மீண்டும் வர்ணம் பூசி சரிசெய்துள்ளார். பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்திய அந்த வக்கிர புத்தி கொண்ட நபர்களைப் பிடிக்கப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.