சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் கனிஷ்கர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கர வெடி விபத்தில் முதற்கட்டமாக 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மேலும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இரண்டு பெண்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து நடந்த அறையில் 15 பேர் பணியில் இருந்த நிலையில் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தரைமட்டமான பட்டாசு ஆலையின் கட்டிட இடிப்பாடுகளில் எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.