மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பரபரப்பான சாலை ஒன்றில், சினிமா காட்சிகளையே மிஞ்சும் வகையிலான ஒரு விசித்திரமான ‘சேஸிங்’ வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. நடுரோட்டில் நின்று கொண்டு வாகனங்கள் மீது கல் எறிந்து ரகளையில் ஈடுபட்ட ஒரு நபரை, அங்கு வந்த போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

அந்த நபரை போலீஸ் வாகனத்திற்குள் தள்ள முயன்றபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் வாகனத்தின் மறுபக்கம் வழியாக அவர் நழுவி மின்னல் வேகத்தில் தப்பி ஓடினார். போலீஸ்காரர் விடாமல் அவரைத் துரத்த, வாகன நெரிசலுக்கு இடையே அந்த நபர் ஓடிய விதம் பார்ப்பதற்கு ஒரு கார்ட்டூன் படம் போலவே இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

​முதலில் போலீஸிடம் சிக்கிய அந்த நபர், அங்கிருந்து தப்பித்துச் சாலைத் தடுப்புகளைத் தாண்டி ஓட முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக் ஓட்டுநரின் உதவியுடன் போலீஸ் அதிகாரி மீண்டும் அந்த நபரைத் துரத்திச் சென்று மல்யுத்தம் நடத்தி மடக்கிப் பிடித்தார்.

ஒரு கட்டத்தில் பிடிப்பட்டும், மீண்டும் தப்பித்து, மீண்டும் துரத்தப்பட்ட அந்த ‘லூப்’ பாணி காட்சிகள் பார்ப்பவர்களைச் சிரிக்கவும் அதே சமயம் அதிர்ச்சியடையவும் வைத்துள்ளது. நடுரோட்டில் நடந்த இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.