நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பாக்கவுண்டன்புதூரில் சின்னாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் செயலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இருக்கு மஞ்சு என்ற மனைவியும், நிலா என்ற மகளும் இருக்கின்றனர். ஓய்வு நேரங்களில் முத்து கால்நடைகளுக்கு ஊசி போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வயிறு வலிப்பதாக முத்து வீட்டில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது நண்பரான ஹோமியோபதி டாக்டரிடம் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார்.
அங்கு வைத்து முத்துவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி ராசிபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் முத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிந்த முத்துவின் அண்ணன் முனியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்து எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அவர் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.