இன்றைய நவீன யுகத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களது கைகளில் ஸ்மார்ட்போன்களுடன் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். தங்களுடைய பக்கங்களில் லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்பதற்காகப் பலர் விதவிதமான வீடியோக்களைப் பதிவிட்டு வரும் நிலையில், தற்போது நெஞ்சைப் பதறவைக்கும் ஆபத்தான வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சில சிறுவர்கள் உயிருள்ள விஷப் பாம்புகளை ஏதோ பொம்மை போலக் கைகளில் பிடித்துக் கொண்டு விளையாடுகிறார்கள்.

முதலாவதாக வரும் ஒரு சிறுவன், ஒரு பாம்பின் உடலில் நூலைக் கட்டி, அதனைத் தரதரவென இழுத்தபடி அசால்ட்டாக நடந்து வருகிறான். அவனுக்குப் போட்டியாக மற்றொரு சிறுவனும் தன் பங்கிற்கு நூலில் கட்டிய வேறொரு பாம்பை இழுத்துக் கொண்டு அங்கு வருகிறான். இதற்கிடையே, மூன்றாவது சிறுவன் ஒருவன் மற்றொரு பாம்பை அவர்கள் மீது தூக்கி எறிகிறான். பாம்புகளுடன் அவர்கள் விளையாடும் இந்த ஆபத்தான விளையாட்டு பார்ப்பவர்களை  நடுங்க வைத்துள்ளது.

எந்த நேரத்திலும் கொத்த கூடிய விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை, விளையாட்டுப் பொருள் போல நினைத்து அவர்கள் செய்த இந்த அலட்சியமான செயல், தங்களது உயிரையே அடகு வைப்பதற்குச் சமம் என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் ‘ஆண்களுக்குப் பிடித்த விலங்கு’ என்ற கேலியான தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.