சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக பல கட்டுப்பாடுகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் விதித்த வண்ணம் இருக்கின்றன. ஆனாலும் ஒரு சில விபத்துகளில் உயிரிழப்புகளும், படுக்காயங்களும் ஏற்பட்டுள்ளன. அதனை கருத்தில் கொண்டு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் மீண்டும் ஒரு பட்டாசு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.இந்த   பட்டாசு வெடி விபத்தில் 10 அறைகள் தரைமட்டமானது. கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியாகியுள்ளார். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

இதில் மாரீஸ்வரன், கருப்பசாமி, மாரிமுத்து, ராஜ்குமார் ஆகியோருக்கு 100% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நிகழ்வு இடத்திற்கு தற்போது தீயணைப்புத் துறையினர் சென்று அங்கு தீயை அணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..