சாலையில் கண்டெடுத்த விலை உயர்ந்த செல்போனை, உரியவரிடம் ஒப்படைக்க காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து காத்திருந்த இரண்டு சிறுவர்களின் நேர்மை சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. சீனாவின் குவாங்டாங் மாகாணம், டோங்குவான் நகரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் சாலையோரம் நடந்து சென்றபோது, அங்கு செல்போன் ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளனர். அந்த செல்போனை எடுத்த சிறுவர்கள், அதனைத் தாங்களே வைத்துக் கொள்ளவோ அல்லது மறைக்கவோ நினைக்கவில்லை. சற்றும் தாமதிக்காமல், உடனடியாக அந்தச் சிறுவர்கள்  போலீசுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

 

தகவல் கொடுத்ததோடு மட்டுமன்றி, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரும் வரை அந்த செல்போனுடன் அங்கேயே காத்திருந்தனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகளிடம் செல்போனை ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் அந்த செல்போனின் உரிமையாளரைக் கண்டறிந்து, அவரிடம் செல்போன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

இளம் வயதிலேயே ‘பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது’ என்ற உயரிய பண்புடன் செயல்பட்ட அந்தச் சிறுவர்களைக் காவல்துறை அதிகாரிகள் மனதாரப் பாராட்டினர். சிறுவர்களின் இந்த நேர்மையான செயல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் நேர்மையான இளைய தலைமுறை.. சிறுவர்களுக்கு எங்களது சல்யூட்!” எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.