ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியைச் சேர்ந்த ஹர்ஷிதா (22) என்ற இளம்பெண், கர்நாடக மாநிலம் திப்புரிப்பள்ளியைச் சேர்ந்த நாகேந்திராவுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்ட இந்த மகிழ்ச்சியான திருமண விழாவின் பிறகு, மணமக்கள் ஹர்ஷிதாவின் வீட்டில் தங்கியிருந்தனர். முதல் இரவு ஏற்பாடுகள் நடைபெறுவதற்குள், ஹர்ஷிதா தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துள்ளார்.
நீண்ட நேரமாக அறைக்குள் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை தட்டியும் பதில் இல்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஹர்ஷிதா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அருகிலுள்ள பெனுகொண்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். இந்த தகவல் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது.
திருமண வீடு துக்க வீடாக மாறிய நிலையில், ஹர்ஷிதா எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்ற காரணம் தற்போதைக்கு தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, இருபுறத்தவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக வாழ்க்கையை தொடங்கிய ஒருவரின் தற்கொலை, அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
