கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பில் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், பிரபந்த விண்ணப்பர், வேத ஆகம பாடசாலைகள் என 15 பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணம் இல்லாமல் பயிற்சியும் ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூபாய் 3,000 மற்றும் பகுதி நேரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூபாய் 1,500 வழங்கப்பட்டு வருகிறது..

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஜூன் 2023 முதல் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அனைத்து பயிற்சி பள்ளிகளில் பயிலும் முழு நேர பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை ரூபாய் 3,000-லிருந்து ரூபாய் 4,000 ஆகவும், பகுதி நேர பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூபாய் 1500-ல் இருந்து ரூபாய் 2,000 ஆகவும் உயர்த்தி வழங்க இன்று 26/7/2023 அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.