விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தற்காலிக மின் இணைப்பு பெட்டி கீழே விழுந்ததாகவும், அதனை மாணவர்கள் ஹரிஷ் குமார் மற்றும் ரவிச்செல்வம் இருவரும் சேர்ந்து தூக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்பாராத வகையில் மின்சாரம் பாய்ந்ததில் 2 மாணவர்களும் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தனர். அதன்பின் அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்த மாணவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.