உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே பிரம்மபுரி பகுதியில், விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த மருமகளைக் கொலை செய்ய முயன்ற மாமனார் குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. கடந்த சில நாட்களாக அவரது மாமனார் குடும்பத்தினர், அவரைத் தவறான வழியில் (விபச்சாரம்) பணம் சம்பாதிக்குமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். இதற்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், அப்பெண்ணைக் கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதலில் அப்பெண்ணின் கழுத்து மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்குத் தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண் ஊடகங்களிடம் கூறுகையில், தவறான தொழிலுக்குச் செல்ல மறுத்ததால் என்னைக் கொல்ல முயன்றார்கள். எனது கொழுந்தன் இதற்கு முன்பு இரண்டு முறை என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இது குறித்து நான் ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் பெண்ணின் கணவரைப் பிடித்துச் சென்றனர். ஆனால், லஞ்சம் வாங்கிக் கொண்டு அவரை உடனே விடுவித்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தற்போது மீரட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்மட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.