தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் உச்சவரம்பை உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்..

தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் நலன் காக்க, நடப்புப் பருவத்தில் கொப்பரைக் கொள்முதல் உச்சவரம்பை உயர்த்திடவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை உயர்த்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் தென்னை விவசாயிகளின் நலன் கருதி நடப்பு பருவத்தில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை 90,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்..

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் கொப்பரை கொள்முதல் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சனை குறித்து மாண்புமிகு இந்திய பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசின் ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்யும் இலக்கை அதிகரிக்க மாநிலம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளிடமிருந்து எண்ணற்ற கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்..

ஒன்றிய அரசின் ஆதரவு விலை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும் சந்தை விலையை நிலைப்படுத்தவும், உளுந்து, பாசிப்பயறு மற்றும் கொப்பரை போன்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும், தமிழ்நாட்டில் இந்த கொள்முதல் ஒன்றிய அரசின் அமைப்பான தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் லிமிடெட் மூலம் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் 4.46 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 53,518 லட்சம் எண்ணெய் வித்துக்களும் ஒரு ஹெக்டேருக்கு 11,692 எண்ணெய் வித்துக்களும் உற்பத்தி செய்யப்பட்டு பரப்பளவிலும், உற்பத்தியிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், தென்னை உற்பத்தியில் தேசிய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்..

தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டாலும், சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக இருந்ததால், தொடக்க காலங்களில் கொள்முதல் குறைவாகவே இருந்தது என்றும், 2022 முதல் தேங்காய் உற்பத்தி அதிகரித்ததால் இந்த நிலை முழுவதுமாக மாறியது என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதன் விளைவாக தேங்காய் சந்தை விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500-ல் இருந்து ரூபாய் 1500 ஆகவும், கொப்பரையின் சந்தை விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 11,500ல் இருந்து ரூபாய் 8,100 ஆகக் குறைந்ததனால் 2022 மற்றும் நடைபாண்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்..

ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 2023 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்திற்குள் 56,000  மெட்ரிக் டன் என்ற இலக்கில் 47, 513 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், விவசாயிகளிடம் இன்னும் கொப்பரை கையிருப்பு அதிகமாக இருப்பதாலும், சந்தை விலை தொடர்ந்து குறைவாக இருப்பதாலும், ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கொப்பரையின் அளவை அதிகரிக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்..

எனவே நடப்பு பருவத்தில் செப்டம்பர் 2023 வரை கொப்பரை கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை தற்போதுள்ள 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தவும், தமிழகத்திற்கான கொள்முதல் இலக்கை 56,000 மெட்ரிக் டன்னில் இருந்து 90,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தவும், தொடர்புடைய அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாண்புமிகு இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை கேட்டுக் கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் இது கொப்பரையின் சந்தை விலையை நிலைப்படுத்த உதவுவதோடு மாநிலத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கும் நல்ல பயன் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்..

https://twitter.com/CMOTamilnadu/status/1678316181177106433