திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வசிக்கும் 24 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், போளூர் அடுத்த அந்திமூரை சேர்ந்த காமேஷ் என்ற இளைஞர் காதலிப்பதாகக் கூறி இவருடன் பழகினார்.

காதலின் தொடர்ச்சியாக இளம்பெண் கர்ப்பமாக, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இந்த தம்பதிக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், காமேஷ் திடீரென மனைவி மற்றும் குழந்தையை விட்டுவிட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. தாயாகிய இளம்பெண் தனியாக குழந்தையை பராமரிக்க வேண்டிய சூழ்நிலையில், படிப்பையும் தொடர முடியாமல் சிரமப்பட்டார்.

இதை தோழிகளிடம் பகிர்ந்தபோது, ஆரணி அருகே இரும்பேடு பகுதியில் வசிக்கும் திருநங்கை மது (சரத்) குழந்தையை பார்த்துக்கொள்வதாக முன்வந்தார். இதன்படி, ஜூன் 10ஆம் தேதி முதல் சரத் தான் குழந்தையை பார்த்துக்கொண்டு வந்தார்.

ஆனால், ஜூன் 13 அன்று, “தாயின் உடல்நிலை மோசமாக உள்ளது” என்று கூறி, குழந்தையை நெற்குணம் என்ற கிராமத்திலுள்ள தன் வீட்டுக்குக் கொண்டு சென்றார். பின்னர் குழந்தையை ஒப்படைக்க மறுத்து, “உன் குழந்தையைப் பெற 6 லட்சம் ரூபாய் கொடு” என மிரட்டியதாக இளம்பெண் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில், சரத் குழந்தையை கடத்தியது மற்றும் பணம் கேட்டு மிரட்டியது உறுதி செய்யப்பட்டதால், அவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.