உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில், மூழ்கிக் கொண்டிருந்த எஸ்யூவிக்குள் சிக்கிய ஓட்டுநரை, உயிரைப் பணயம் வைத்து ஒருவர் காப்பாற்றிய காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டப்படுகிறது.

சாலையில் திடீரென ஓடிய ஒரு குழந்தையை மோதாமல் தவிர்க்க முயன்ற சுபம் திவாரி என்ற ஓட்டுநர், கட்டுப்பாட்டை இழந்த அவரது எஸ்யூவியுடன் அருகிலிருந்த குளத்தில் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கினார். வாகனம் தண்ணீரில் ஆழமாகச் செல்லத் தொடங்கியதும், அருகில் படகில் இருந்த ஃபைசல் என்ற இளைஞர் எந்த தயக்கமும் இன்றி உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினார்.

 

படகை வேகமாக ஓட்டிச் சென்று, நீரில் குதித்த ஃபைசல், வாகனத்தின் எடையும் நீரோட்டத்தையும் எதிர்த்து போராடி, சிக்கியிருந்த திவாரியை சரியான நேரத்தில் வெளியே இழுத்தார். நேரில் இருந்தவர்கள் எடுத்த வீடியோவில், அவரது துணிச்சலான மீட்பு தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி, சமூக வலைதளங்களில் ஃபைசலின் வீரச் செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. “இந்த மனிதனின் சிறந்த துணிச்சலை அங்கீகரிக்க பிலிபிட்ட் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவனிக்கப்படாமல் போகக்கூடாத செயல் இது” என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஃபைசலுக்கு துணிச்சல் விருது வழங்க வேண்டும் எனவும் இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.