திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே இருக்கும் மாநகராட்சி குப்பை தொட்டியில் தெரு நாய்கள் சூழ்ந்து நின்றது. அந்த நாய்கள் எதையோ கடித்து குதறி கொண்டிருந்தது. அப்போது குப்பை அள்ளுவதற்காக சென்ற தூய்மை பணியாளர்கள் காயங்களுடன் இரண்டு பெண் குழந்தைகளின் உடல்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஒரு குழந்தையின் உடலில் தலை இல்லாமல் இருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பெண் குழந்தைகளின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இரட்டை பெண் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்து இறந்தது தெரியவந்தது. குழந்தைகளின் உடல்களை யாரோ சாக்குப்பையில் போட்டு குப்பை தொட்டியில் வீசி சென்றனர். அதில் ஒரு குழந்தையின் தலையை நாய்கள் கடித்து கவ்வி சென்றுள்ளது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் குழந்தைகளின் உடல்களை வீசி சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.