திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் குடமுழக்கு விழா வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு மலை கோவிலில் 90-க்கும் மேற்பட்ட யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலை கோவில் முதல் பாத விநாயகர் கோவில் வரை  குடமுழக்கு நடைபெறுகின்ற  காரணத்தினால் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 26 ஆம் தேதி பாத விநாயகர் கோவில் முதல் படிப்பாதையில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் குடமுழக்கு நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு குடமுழுக்கு நாள்வரை பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. அதேபோல் திங்கள் கிழமை முதல் தங்கத்தேர் புறப்பாடும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 28ஆம் தேதி முதல் தங்கத்தேர் உலா வழக்கம்போல் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மலைக்கோவில் பிரகாரங்களிலும் ராஜகோபுரம் முதல் தங்க கோபுரம் வரையிலும் மின்விளக்கு அலங்காரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மலைக்கோவில் இரவு நேரத்தில் விளக்குகளால் ஜொலித்து வருகிறது. குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு கிரிவிதி மலைக்கோவில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.