கடந்த முறை டி20 உலகக்கோப்பைக்கு தகுதி கூட பெற முடியாமல் தவித்த ஜிம்பாப்வே அணி, தற்போது 2026 உலகக்கோப்பையில் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஒரு காலத்தில் கிழிந்த காலணிகளை ஒட்டுப்போட்டு விளையாடும் அளவிற்கு வறுமையிலும், ஸ்பான்சர் இல்லாமலும் தவித்த அந்த அணி, இன்று முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவையே வீழ்த்தி வெளியேற்றியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான போட்டி மழையினால் ரத்தானதைத் தொடர்ந்து, சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அதிகாரப்பூர்வமாக அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

​இந்த வெற்றி குறித்துப் பேசிய கேப்டன் சிக்கந்தர் ராசா, சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றது வெறும் ஆரம்பம் தான் என்றும், இன்னும் பல இலக்குகளை அடைய வேண்டியுள்ளதாகவும் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 2021-ல் ஸ்பான்சர் கேட்டு கெஞ்சிய நிலையில் இருந்து, இன்று இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற ஜாம்பவான் அணிகளுடன் மோதும் அளவிற்கு ஜிம்பாப்வே உயர்ந்துள்ளது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. பிப்ரவரி 21 முதல் தொடங்கவுள்ள சூப்பர்-8 சுற்றில் அந்த அணி தனது அடுத்தகட்ட அதிரடியைத் தொடரக் காத்திருக்கிறது.