சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 118.19 கிலோ மீட்டர் தூரத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை ஊதா வழிதடத்திலும், கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரை காவி வழித்தடத்திலும், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை சிவப்பு வழிதடத்திலும் 3 வழித்தடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு முதல் கட்டமாக மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரை 1.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை 1.226 கிலோமீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழித்தடத்தில் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனையடுத்து கெல்லீஸ் முதல் தரமணி வரை‌ 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. வழக்கமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் இயந்திரங்களுக்கு பெயர் வைப்பது வழக்கம். அதன்படி மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் பயன்படுத்தும் இயந்திரத்திற்கு காவிரி என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு அடையாறு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் பணிகளால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.