கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொட்டம்பரா பகுதியில், தேநீர் தயாரித்து வழங்க மறுத்த மருமகளை, அவரது மாமியாரே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டம்பரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் பாபு. இவருடைய மனைவி ராஜிலா (28). இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. சுனில் பாபுவின் தாயார் சாந்தா (70) இவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். மாமியார் சாந்தாவிற்கும், மருமகள் ராஜிலாவிற்கும் இடையே நீண்ட நாட்களாகவே குடும்பப் பிரச்சினை காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் சுனில் பாபு வழக்கம்போல் வேலைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த சாந்தா, தனக்கு ‘டீ’ போட்டுத் தருமாறு மருமகள் ராஜிலாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ராஜிலா மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சாந்தா வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து மருமகள் ராஜிலாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராஜிலா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
தன் கண் முன்னே தாய் வெட்டப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தை சத்தமிட்டு அலறியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜிலாவை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் ராஜிலாவிற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ராஜிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மருமகளைக் கொலை செய்த மாமியார் சாந்தாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
