காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதற்கு  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூர் தொட்டில் பாலத்தில் அமைந்துள்ள காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தபட்டது. இந்த சம்பவம் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்றுக்கொண்ட அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது .

இத்தகைய அநாகரிகமான செயலுக்கு காரணமானவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே காவல்துறையினர் இந்த கல்வெட்டு உடைப்பு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தப்பட்டதை தமிழக காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இதே இடத்தில் மீண்டும் காமராஜரின் திரு உருவ சிலையும், கல்வெட்டும் விரைவில் திறக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.