திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்ல கவுண்டன் பாளையத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெயசுதா(24) கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு ஜெயசுதா சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் ஈரோடு மாவட்டம் வாணிபுத்தூரை சேர்ந்த வசந்த் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் நேற்று முன்தினம் ஜெயசுதா கோபி காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் விவரத்தை கூறி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதற்கு போலீசார் இது சம்பந்தமாக ஏற்கனவே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரே சம்பவத்தை மற்றொரு வழக்காக பதிவு செய்ய முடியாது என தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து காவல் நிலையம் முன்பு ஜெயசுதா உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்ததும் போலீசார் ஜெயசுதாவை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்கொலைக்கு முயன்ற ஜெயசுதா மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.