சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நித்யா (26), பி.காம் படித்ததையடுத்து அம்பத்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதங்களாக கொடுங்கையூரில் தனியாக வாடகை வீட்டில் தங்கி வேலை சென்றுவந்தார்.

அங்கு விவேகானந்தா காலனியைச் சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருடன் நட்பாகி, இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 2 மாதங்களாக டீச்சர்ஸ் காலனியில் ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் நித்யா, தனது பெற்றோர் வீட்டுக்கு வர இருப்பதால் நீ வெளியே செல் என்று பாலமுருகனிடம் கூறியுள்ளார். மாலை 5 மணிக்கு வீடு திரும்பிய பாலமுருகன், நித்யா வாயில் நுரைவிட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், நித்யா உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம், வீட்டில் இருந்த 25 பவுன் நகை காணவில்லை என்று பாலமுருகன் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நித்யா அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான விபரம் பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பாலமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.