உத்தரபிரதேசம் கோரக்பூரில் உள்ள பிச்சியா, ஷாக்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் 26வது படை பிஏசி (PAC) காவலர் பயிற்சி மையத்தில், 600க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெறுகிறார்கள். ஆனால், மையத்தில் தங்கும் இடம், மின்சாரம், தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பயிற்சியாளர்கள் பெரும் விரக்தியில் செவ்வாய்க்கிழமை காலை பயிற்சி மைய வாசலில் கூடி சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் கதறி அழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

பயிற்சியாளர்கள் தெரிவித்ததாவது, “வெயிலில் ஒரே ஒரு RO இயந்திரம் மட்டுமே உள்ளது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு பாதி லிட்டர் தண்ணீரே கிடைக்கிறது. போதிய எண்ணிக்கையில் குளிர்பானி இயந்திரங்கள் கிடையாது. கழிப்பறைகள் போதாது. சிலர் வெளியே குளிக்க வேண்டிய நிலை.

அதுவும் மீறி, கழிப்பறை பகுதியில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகவும் நாங்கள் புகார் கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று தெரிவித்தனர். மேலும், அவர்கள் புகார்கள் கூறும்போது அதிகாரிகள் மோசமான வார்த்தைகளால் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, மாவட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பயிற்சியாளர்களிடம் ஆலோசனை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தினர். விசாரணையில், பயிற்சி மையத்தில் 300 பேர் தங்கக்கூடிய வசதியே இருப்பதாகவும், தற்போது 598 பேர் இருப்பதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பிஏசி கமாண்டண்ட் ஆனந்த்குமார் கூறியதாவது, “புதிய கழிப்பறைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகிறது. அனைத்து வசதிகளும் விரைவில் அளிக்கப்படும்” என உறுதியளித்தார்.