இந்தியாவில் வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது 1961-ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்நிலையில்  மத்திய பிரதேச மாநிலத்தில் மிதுன்-ரீனா தன்வார் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அதோடு ரீனா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் ரீனாவிடம் அவரது கணவர் மற்றும் மாமியார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி உள்ளனர். ஆனால் அவர் வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரத்தில் அப்பெண்ணின் கணவரும்,மாமியாரும் அவரை கொலை செய்ய முடிவு செய்தனர்.அதன்படி அவரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி எரிக்க முயன்றனர். இதனைக் கண்ட அந்த ஊரில் உள்ள ஒருவர் ரீனாவின் தந்தையான ராம்பிரசாத் தன்வாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

அதன் பின் தகவல் அறிந்த ரீனாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ரீனாவின் குடும்பத்தினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த பெண்ணின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தப்பி ஓடிய மிதுன் மற்றும் அவரது தாயார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.