இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி, நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதிரடியாக விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 189 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்  அபிஷேக் சர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தனர். குறிப்பாக, இங்கிலாந்து மண்ணில் டி20 சர்வதேச போட்டியில் அரைசதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்தார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக பெய்த கனமழை காரணமாக ஆட்டம் தடைபட்டு, இறுதியில் போட்டியின் முடிவு ஏதுமின்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் மற்றும் இந்திய அணியின் பலத்த போராட்டம் வீணானது.

மறுபுறம், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரன் வைபவ் சூரியவன்ஷிக்கு இந்த போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அயர்லாந்துக்கு எதிரான தொடரிலும், தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் மேனேஜ்மென்ட் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா மீதே நம்பிக்கை வைத்தது. ஆனால், சஞ்சு சாம்சன் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் சோபிக்கத் தவறியதால், வைபவை அணியில் சேர்க்காதது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தற்போதைய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான நிர்வாகத்திற்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். “ஐபிஎல் தொடரில் உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த வைபவ் சூரியவன்ஷியை இன்னும் பெஞ்சில் உட்கார வைத்திருப்பது நியாயமில்லை. மைதானங்கள் சிறியதாகவும் பிட்ச் மெதுவாகவும் இருந்த அயர்லாந்து தொடரிலேயே அவனுக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். இங்கிலாந்து தொடரிலாவது அவனுக்கு உடனடியாக வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.