கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலரை அங்கு சென்ற ஒரு நபர் தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சனைக்காக சென்றுள்ளார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த கிராம பஞ்சாயத்து அலுவலரான நாகேந்திர பட்டரிடம் தனது சொத்து ஆவணங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அரசு ஊழியர் கன்னடத்தில் பேசியதால் சுபாஷ் டோக்ரே அவரை மராத்தியில் பேசுமாறு கூறினார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து டோக்ரே தன்னுடைய சொத்து ஆவணங்களை கன்னடத்திற்கு பதிலாக மராத்தியில் தருமாறு கூறினார். அதோடு மராத்தியில் பேசுமாறு அவரை மிரட்டியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் காவல்துறை அதிகாரிகள் அரசு ஊழியரை அவமதித்து பேசியதாக டோக்ரேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து “அரசு அதிகாரிகளுக்கு எதிரான இத்தகைய செயல்களை சாதாரணமாக பார்க்க முடியாது, அரசு ஊழியரை தனது கடமையை செய்யவிடாமல் தடுத்ததற்காக சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.