இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தன்னுடைய இணையதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறைகள் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய அறிவிப்பின்படி 9 விதமான சேவைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி காசோலை ரிட்டன், ECS டெபிட் ரிட்டன் கட்டணம், சராசரி குறைந்தபட்ச இருப்பு, சராசரி மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காதது, லெட்ஜர் போலியோ கட்டணங்கள், இணைய மற்றும் மொபைல் வங்கி சேவைகள் போன்றவைகளுக்கு புதிய கட்டணம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஆனால் தொழில்நுட்ப பிரச்சனைகளின் காரணமாக காசோலை மீண்டும் வங்கிக்கு திரும்ப அனுப்பப்பட்டால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

இந்நிலையில் ரூ. 1000 வரையிலான காசோலைகளுக்கு ரூபாய் 200 கட்டணமும், ரூ. 1000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான காசோலைகளுக்கு 300 கட்டணமும், ரூ. 10 லட்சத்துக்கும் மேல் மற்றும் ரூ. 50 லட்சத்துக்கும் குறைவான காசோலைகளுக்கு ரூ. 500 கட்டணமும், ரூ. 50 லட்சத்திற்கு மேல் மற்றும் ஒரு கோடிக்கு கீழ் ரூ. 1000 கட்டணமும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால் ரூ. 2000 கட்டணமும் காசோலை திரும்ப அனுப்பப்பட்டால் செலுத்த வேண்டும். மேலும் வங்கியில் மினிமம் பேலன்ஸுக்கு குறைவான தொகை இருந்தால் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 25 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். கிராமப்புறங்களில் குறைந்தது மினிமம் பேலன்ஸ் ‌ரூ. 500, அரை நகர்புறங்களில் குறைந்தபட்ச மினிமம் பேலன்ஸ் ரூ. 1000, நகர்ப்புற அல்லது மெட்ரோ நகரங்களில் குறைந்தபட்ச மினிமம் பேலன்ஸ் ரூ. 2000 வரை இருக்க வேண்டும்.