இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கம்பேக் கொடுத்து அசத்திய இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். காலே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 3-வது வரிசையில் களமிறங்கி அவர் விளாசிய இந்தச் சதம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இடதுகை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல், 21-ம் நூற்றாண்டில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 3-வது வரிசையில் களமிறங்கி சதம் அடித்த இரண்டாவது இடதுகை பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மட்டுமே இந்தச் சாதனையைச் செய்திருந்தார். கங்குலி கடந்த 2002-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 3-வது வரிசையில் இறங்கி 136 ரன்கள் குவித்திருந்தார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது படிக்கல் இந்தச் சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

 

இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட  புஜாரா ஓய்வு பெற்ற பிறகு, டெஸ்ட் போட்டிகளில் 3-வது வரிசை இடம் இந்திய அணிக்கு ஒரு பெரிய தலைவலியாகவே இருந்து வந்தது. கடைசியாக புஜாரா 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய நிலையில், அதன்பிறகு அந்த இடத்திற்காக இந்தியா 11 வெவ்வேறு வீரர்களை மாற்றி மாற்றிப் பரிசோதித்துப் பார்த்தது.

ஷூப்மன் கில் சிறிது காலம் அந்த இடத்தை நிரப்பினாலும், பின்னர் அவர் கேப்டனாகப் பொறுப்பேற்றதும் 4-வது இடத்திற்கு மாறினார். இதனால் கடந்த சில காலமாகவே 3-வது வரிசையில் நிலையான சதம் அடிக்க ஆளில்லாமல் திணறி வந்த இந்திய அணிக்கு, தற்போது தேவ்தத் படிக்கல் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் மிகச்சரியான தீர்வை வழங்கியுள்ளார். தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.