உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்களும் வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கின்றது. மேலும் இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதோடு அந்நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. இந்த போர் மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் ராணுவ உதவியால் நீடித்துக் கொண்டே செல்கின்றது.

இந்த நிலையில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவுற்றதை அடுத்து உயிரிழந்த உக்ரேனிய வீரர்களுக்காக உக்ரைனின் புனித சோபியா சதுக்கத்தில் வைத்து அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனை அடுத்து அவர் களத்தில் போராடும் உக்ரேனிய வீரர்களை மனமார பாராட்டியுள்ளார். அதோடு உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு விருதுகளையும் பதக்கங்களையும் தந்து கௌரவித்துள்ளார்.