வத்திராயிருப்பு கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தனது குடும்பத்திலேயே முதல் பட்டதாரியாகவும் அரசு ஊழியராகவும் உருவெடுத்தவர் பிரதாப். அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த இவர், தனது முதல் முயற்சியிலேயே 2016ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 21-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்தார்.

தொடர்ந்து, உத்தரகாண்ட் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிற்சிப் பெற்ற இவர், தர்மபுரி மாவட்டம் அரூரில் துணை ஆட்சியராகப் பணியைtத் தொடங்கினார். அங்கு ஏழை எளிய மக்களுக்குப் பட்டா வழங்குதல் மற்றும் மின் வசதியில்லாத மலை கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்குதல் போன்ற பொதுமக்களுக்குப் பயனுள்ள பல்வேறு பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்தார்.

திருவண்ணாமலையில் கூடுதல் ஆட்சியராகப் பணியாற்றிய காலகட்டத்தில், வெறும் ஒரே மாதத்தில் 1100 குளங்களை வெட்டி சாதனை படைத்த இவர், கோவை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றபோது மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதில் தனி கவனம் செலுத்தினார்.

மேலும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மற்றும் பெண்கள் வேலைவாய்ப்புத் துறை போன்ற பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோது வறண்டு கிடந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றினார். இதன் மூலம் ஒரே பருவமழையில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததுடன், இக்கண்டுபிடிப்புக்காகப் பொதுமக்களால் ‘கின்னஸ் நாயகன்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார்.

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் 54-வது மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள பிரதாப், “காபியுடன் கலெக்டர்” போன்ற புதுமையான திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களைத் ஊக்கப்படுத்தி வருகிறார்.

“>

 

மேலும், மாவட்டத்தின் சர்வதேச சுற்றுலா உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பூம்புகார் கப்பல் போக்குவரத்தை நவீனப்படுத்துதல் மற்றும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளுக்கு நேரில் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தல் எனத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து அயராது உழைக்கும் இவர், கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் கிடைத்த ஒரு பொக்கிஷமாகவே பார்க்கப்படுகிறார்.