பிரேசில் நாட்டில் 19 வயது இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு, இரு வேறு நபர்கள் தந்தையாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘ஹெட்டோரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன்’ (Heteropaternal Superfecundation) எனப்படும் இந்த மிக அரிய வகை நிகழ்வு மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

19 வயது இளம் பெண் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளுக்குத் தந்தை என அவர் கருதிய ஒரு நபருக்கு டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்தபோது, அதிர்ச்சிகரமான முடிவு வெளியானது. அந்த நபரின் டிஎன்ஏ ஒரு குழந்தையுடன் மட்டுமே ஒத்துப்போனது, மற்றொரு குழந்தையுடன் ஒத்துப்போகவில்லை. இதனால் குழப்பமடைந்த அந்தப் பெண், அதே நாளில் தான் மற்றொருவருடன் உறவு கொண்டதை நினைவு கூர்ந்தார். அந்த இரண்டாவது நபருக்குச் சோதனை செய்தபோது, அவர் மற்றொரு குழந்தைக்குத் தந்தை என்பது உறுதியானது.

வழக்கமாக ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் ஒரு முட்டை மட்டுமே வெளியாகும். ஆனால், சில நேரங்களில் ‘ஹைப்பர் ஓவுலேஷன்’ (Hyperovulation) காரணமாக இரண்டு முட்டைகள் வெளியாகலாம். அந்தப் பெண் குறுகிய கால இடைவெளியில் இரு வேறு ஆண்களுடன் உறவு கொள்ளும்போது, அந்த இரண்டு முட்டைகளும் வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்களால் கருவுறுகின்றன. விந்தணுக்கள் பெண்ணின் உடலுக்குள் சில நாட்கள் உயிர்வாழ முடியும் என்பதால், இது சாத்தியமாகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Fact Explainers (@factexplainers)

விலங்கினங்களான நாய், பூனை போன்றவற்றில் இது சாதாரணமாக நடந்தாலும், மனிதர்களிடையே இது மிகவும் அரிதானது. இதுவரை உலக அளவில் அதிகாரப்பூர்வமாக சுமார் 20 வழக்குகள் மட்டுமே இதுபோன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரட்டைக் குழந்தைகள் ஒரே தாயின் கருவில் வளர்ந்தாலும், மரபணு ரீதியாக ‘அரை சகோதரர்கள்’ (Half-siblings) என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “மனித உடலின் சிக்கலான அமைப்பிற்கு இதுவே சாட்சி” என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம், குழந்தைகளின் சட்டப்பூர்வமான பொறுப்புகள் மற்றும் பராமரிப்பு குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.