அமெரிக்கா வாஷிங்டனில் பணியின்போது உணவு தொண்டையில் சிக்கி உயிருக்குப் போராடிய மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், யாருடைய உதவியும் இன்றி நாற்காலியைப் பயன்படுத்தித் தனக்குத்தானே முதலுதவி செய்து உயிர் தப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
எலியாஸ் (Elias) என்ற மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர், தனது அலுவலக மேஜையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக உணவின் ஒரு துண்டு அவரது மூச்சுக் குழாயில் சிக்கியது. இதனால் அவருக்குப் பயங்கரமான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அருகில் உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், விநாடிகள் நகர நகர அவரது உயிருக்கு ஆபத்து அதிகரித்தது.
பொதுவாக இதுபோன்ற இக்கட்டான சூழலில் எவரும் பதற்றமடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் மயங்கி விழுந்துவிடுவார்கள். ஆனால், மருத்துவத் துறையில் அனுபவம் கொண்ட எலியாஸ், சிறிதும் பதற்றமடையாமல் நிதானத்தைக் கடைப்பிடித்தார்.
🚨While eating at his desk, paramedic technician Elias choked on a piece of food. Staying calm, he used a chair to perform the Heimlich maneuver on himself and saved his own life. pic.twitter.com/tFlHBeK6BX
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) April 19, 2026
தொண்டையில் சிக்கிய உணவை வெளியேற்ற அவர் ஒரு தந்திரத்தைக் கையாண்டார். அங்கிருந்த ஒரு நாற்காலியின் பின்பக்க விளிம்பைப் பயன்படுத்த முடிவு செய்தார். தனது வயிற்றுப் பகுதியை (நெஞ்சுக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியை) நாற்காலியின் விளிம்பில் வைத்து, வேகமாகவும் அழுத்தமாகவும் அழுத்தித் தனக்குத்தானே ‘ஹெய்ம்லிக் மேனோவர்’ (Heimlich Maneuver) முதலுதவியைச் செய்து கொண்டார்.
இந்த அழுத்தத்தின் காரணமாக, மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த உணவுத் துண்டு வெளியேறியது. இதன் மூலம் அவர் தனது உயிரைத் தானே காப்பாற்றிக் கொண்டார். தனியாக இருக்கும்போது இதுபோன்ற விபத்து ஏற்பட்டால், ஒரு நாற்காலி அல்லது மேஜையின் முனையைப் பயன்படுத்தி எவ்வாறு உயிரைக் காக்கலாம் என்பதற்கு எலியாஸின் செயல் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. நெருக்கடியான நேரத்தில் பதற்றமடையாமல் சிந்திப்பதே பாதி வெற்றியைக் கொடுக்கும் என்று எலியாஸின் துணிச்சலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
